செய்திகள்
ஆதார் பதிவுக்கு 2019-20ம் கல்வியாண்டு அடையாள அட்டையை பயன்படுத்தலாம்
வைரஸ் பரவல் காரணமாக தபால் நிலையங்களில் ஆதார் பணிகளுக்கு தமிழக தபால் வட்டம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
திருப்பூர்:
குழந்தைகளுக்கு ஆதார் பதிவு மற்றும் திருத்த பணிகளுக்கு முக்கிய ஆவணமாக பள்ளி அடையாள அட்டை பயன்படுத்தப்படுகிறது. கொரோனா சூழல் காரணமாக கடந்த மார்ச் முதல் வீட்டிலிருந்து ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் படிப்பதால் பல பள்ளிகளில் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஆதார் பதிவு மற்றும் திருத்த பணிகளுக்கு கடந்த 2019-20ம் கல்வியாண்டுக்கான அடையாள அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஒருங்கிணைந்த அடையாள அட்டை ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வங்கி, தபால் நிலையங்கள் உள்ளிட்ட ஆதார் பதிவுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசு, தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-20ம் கல்வியாண்டுக்கான பள்ளி அடையாள அட்டையை ஆவணமாக சமர்ப்பித்து வரும் டிசம்பர் 31-ந்தேதி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்தப்பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவல் காரணமாக தபால் நிலையங்களில் ஆதார் பணிகளுக்கு தமிழக தபால் வட்டம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.