763 தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட விரும்பவில்லை
சென்னை:
கொரோனா தடுப்பூசி டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ முன்கள பணியாளர்களுக்கு முதலில் அளிக்கப்படுகிறது.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களின் விவரங்களை மாநகராட்சி சுகாதாரத்துறை கேட்டறிந்து வருகிறது. கடந்த சில நாட்களாக எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு முழுபலன் கிடைக்கவில்லை.
சென்னையில் 6951 தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 750 பெரிய மருத்துவமனைகளும், மாநகராட்சி உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளை சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் அணுகி மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றிய விவரங்களை கேட் டனர்.
1709 தனியார் மருத்துவ மனைகளிடம் தடுப்பூசி போடுவதற்காக பணியாளர்கள் பட்டியலை தரும்படி கேட்டுள்ளது. இதில் 763 மருத்துவமனைகள் தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கவில்லை.
இது மொத்த தனியார் மருத்துவமனைகளில் 20 சதவீதம் ஆகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.
இன்று மாலைக்குள் இந்த பணியினை நிறைவு செய்யலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறும்போது, ‘தடுப்பூசி போடக்கூடிய மருத்துவர்கள், களப்பணியாளர்கள் முழுமையான விவரம் இன்று மாலைக்குள் தெரியவரும். நாங்கள் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை’ என்றனர்.
60 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கும் 40 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி கணக்கெடுத்துள்ளது.
இந்த நிலையில் அரசு மருத்துவமனை டாக்டர்களும், நர்சுகளும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள விருப்பம் காட்ட வில்லை.
சென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் பெரும்பாலான டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் பயத்தால் தயக்கம் காட்டுகிறார்கள்.
இதுபற்றி அரசு டாக்டர் சங்க பிரதிநிதி ஒருவரிடம் கேட்டபோது, கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு தெளிவான முடிவு வரவில்லை. அதுதான் தயக்கமாக உள்ளது.
தடுப்பூசி போட்டு கொண்டால் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஒருவித பயம் உள்ளதால் தயங்குகிறார்கள். பொறுத்திருந்து தான் போட்டுக் கொள்வார்கள்’ என்றார்.