செய்திகள்
ஒட்டன்சத்திரம் அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள்
ஒட்டன்சத்திரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தின.
சத்திரப்பட்டி:
ஒட்டன்சத்திரம் அருகே மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அருகே யானைகள் முகாமிட்டுள்ளன. அதில் ஒரு யானை குட்டி ஈன்றது. அந்த யானைக்குட்டி இறந்தே பிறந்தது. இதனால் அப்பகுதியில் யானைகள் திரண்டு யானைக்குட்டியை சுற்றி வந்து எழுப்ப முயன்றன.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து யானைகளை விரட்டினர். மேலும் இறந்த யானைக்குட்டியை அப்பகுதியிலேயே புதைத்தனர்.
இந்த நிலையில் பெத்தேல்புரம் பகுதியில் புகுந்த யானைகள் குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தின. மேலும் அப்பகுதியில் இருந்த வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தின. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.