செய்திகள்
தற்கொலை

சித்தூரில் குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை

Published On 2019-11-04 10:01 GMT   |   Update On 2019-11-04 10:40 GMT
சித்தூரில் குழந்தையை கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தூர்:

சித்தூர் சந்தப்பேட்டை அடுத்த ஓப்பன்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50). இவரது மனைவி புவனேஸ்வரி (45). இவர்களது மகள் காயத்ரி (9).

இன்று காலை 7.45 மணிவரையில் ரவியின் வீடு திறக்கப்படவில்லை. இதனால் பக்கத்து வீட்டுக்காரர் சந்தேகம் அடைந்து கதவைத் தட்டினார். கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 3 பேரும் இறந்து கிடந்தனர். அவர்கள் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

குழந்தையை வி‌ஷம் கொடுத்து கொன்றுவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் சித்தூர் 2-வது போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கேசவ ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சனையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு மகள் பிறந்தாள். தற்போது அந்த குழந்தையுடன் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.
Tags:    

Similar News