செய்திகள்

நாகை மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

Published On 2019-02-10 05:49 GMT   |   Update On 2019-02-10 07:04 GMT
நாகை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Fishermen

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்பிடி கருவிகளை அபகரித்து செல்வது, சிறைபிடித்து சென்று சிறையில் அடைப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாகை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை அக்கரைப்பேட்டை டாட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 42). மீனவர்.

இவருக்கு சொந்தமான பைபர் படகில் சீனிவாசன் மற்றும் அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி(25), கோபாலகிருஷ்ணன்(25), ஆனந்தபாபு(23), நிலவரசன் (21), வீரசெல்வன்(30), பிருதிவிராஜன்(20) ஆகிய 7 பேரும் கடந்த 7-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டை கடுவையாற்றங்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நேற்று மாலை வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 நாட்டிங்கல் கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரக கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் நாகை மீனவர்களின் படகில் ஏறி எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி சீனிவாசன், கந்தசாமி, கோபாலகிருஷ்ணன், ஆனந்தபாபு, நிலவரசன், வீரசெல்வன், பிருதிவிராஜன் ஆகிய 7 பேரையும் சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Fishermen

Tags:    

Similar News