வழிபாடு
தஞ்சை பெரியகோவில் தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

தஞ்சை பெரியகோவில் தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

Published On 2022-04-08 09:03 GMT   |   Update On 2022-04-08 09:03 GMT
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் வருகிற 13-ந்தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி, வராகி, நந்தியம்பெருமான், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், நடராஜர், கருவூரார் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

தஞ்சை பெரியகோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழா 15 நாட்கள் நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 30-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த தேரோட்டம் நடைபெறுகிறது.

தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தஞ்சையில் உள்ள 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீதிகளில் தேர் தடையின்றி செல்லும் வகையில் புதிதாக தார்சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம். 19-ம் நூற்றாண்டுக்குப்பின் பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.50 லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டது.

இந்த தேர் தரையில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை 3 நிலைகளாக 16½ அடி உயரம் கொண்டது. இந்த 3 நிலைகளிலும் மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. தேரோட்டத்தையொட்டி தேர் அலங்கரிப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது.

இதையடுத்து தேர் அலங்கரிப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்றுகாலை தேர் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு சுத்தம் செய்தனர். அதனைத்தொடர்ந்து தேர்ருக்கு வார்னிஸ் அடிக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. மேலும் தேர் சக்கங்களுக்கு கிரீஸ் வைக்கும் பணியும் நடைபெற்றது.
Tags:    

Similar News