ஆட்டோமொபைல்
ஏ.எம்.டி. வசதியுடன் மஹிந்திரா எக்ஸ்.யு.வி 300
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 காரின் ஏ.எம்.டி. வெர்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளது.
எஸ்.யு.வி. மாடல்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளுள் ஒன்றாக எக்ஸ்.யு.வி300 இருக்கிறது. இந்த மாடலில் மஹிந்திரா ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதியை (ஏ.எம்.டி.) அறிமுகம் செய்கிறது. டீசல் மாடலில் ஏ.எம்.டி. வசதியோடு எக்ஸ்.யு.வி 300 அறிமுகமாகிறது.
இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 கார் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் அறிமுகமானது. அப்போதே ஏ.எம்.டி. வசதி கொண்ட மாடல் பின்னர் அறிமுகமாகும் என மஹிந்திரா தெரிவித்தது. இந்த மாடல் பெருமளவு வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் இதில் ஏ.எம்.டி. வெர்ஷனை மஹிந்திரா அறிமுகம் செய்கிறது.
இந்த மாடல் தவிர மஹிந்திராநின் மராசோ மாடலிலும், மரேலி ஆட்டோமேடட் மானுவல் டிரான்ஸ்மிஷன் (ஏ.எம்.டி.) வசதியை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த காரின் 110 ஹெச்.பி., 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 117 ஹெச்.பி., 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆகிய இரு மாடல்களிலுமே மானுவல் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி தான் வழங்கப்பட்டிருந்தது. இவை இரண்டுமே 6 கியர்களைக் கொண்டிருந்தன. தற்போது இந்த மாடலில் ஏ.எம்.டி. வசதி வழங்கப்படுகிறது.
தற்சமயம் சந்தையில் கிடைக்கும் ஃபோர்டு இகோ ஸ்போர்ட், ஹூன்டாய் வென்யூ, டாடா நெக்சான், மாருதி விடாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல்களின் டீசல் வெர்ஷனில் ஏ.எம்.டி. வசதி கிடையாது. அந்த வகையில் எக்ஸ்.யு.வி300 மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் ஏ.எம்.டி. வெர்ஷன் விலை வழக்கமான மாடலை விட ரூ.50 ஆயிரம் வரை அதிகமாக இருக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.