செய்திகள்
முற்றுகை

ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

Published On 2021-05-17 13:47 GMT   |   Update On 2021-05-17 13:47 GMT
திருமுல்லைவாசலில் கொரோனா பாதுகாப்பு சுகாதார பணிகள் செய்யாத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பரிமளா தமிழ்ச்செல்வன். இவர், கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும், எந்தவித பாதுகாப்பு சுகாதார பணிகளும் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமுல்லைவாசல் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டனர். இதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தநிலை ஏற்பட்டும் இதுவரை ஊராட்சியில் கிரிமி நாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட எந்த சுகாதார பணிகளும் செய்யபடவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் மாலினி பூவரசன், தி.மு.க. கிளை செயலாளர்கள் ஸ்டீபன், வக்கீல் கார்த்திக் மற்றும் கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து கண்டன கோஷமிட்டனர். இதனால் திருமுல்லைவாசல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போராட்டக்காரர்கள் தாமாக கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News