உள்ளூர் செய்திகள்
ஜல்லிக்கட்டு நடத்த முறையான அறிவிப்பு வெளியிட கோரிக்கை
ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு நடத்த முறையான அறிவிப்பை கலெக்டர் வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் 50&க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிடுமா? என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் தமிழக அரசும் ஜல்லிக்கட்டை நடத்தலாம், ஆனால் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த வேண்டும் என்று அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு இவ்வாண்டும் நடைபெறும் என்று கிராமத்தை சேர்ந்தவர்கள் வாடிவாசல் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
மாவட்ட கலெக்டர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் தைப்பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக வாடிவாசல் ஏற்பாடுகள் தயாராக வருகின்றன.
பார்வையாளர்களுடன் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.