செய்திகள்
தற்கொலை

கொடைக்கானல் அருகே மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியர் தற்கொலை

Published On 2021-04-30 18:00 GMT   |   Update On 2021-04-30 18:00 GMT
கொடைக்கானல் அருகே மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரும்பாறை:

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 37). இவர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பண்ணைக்காட்டில் உள்ள மத்திய அரசின் காபி விரிவாக்க அலுவலகத்தில் கள அலுவலராக பணிபுரிந்தார்.

இதற்காக அவர், பண்ணைக்காட்டில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்தார். வாரத்துக்கு ஒருமுறை சசிகுமார் மதுரைக்கு சென்று வருவார். அதன்படி கடந்த 27-ந்தேதி மதுரையில் இருந்து பண்ணைக்காடு வந்தார். தினமும் காலையில் காபி விரிவாக்க அலுவலகத்தை சசிகுமார் திறப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் மாலை பணி முடிந்த பிறகு அனைத்து ஊழியர்களும் வீட்டுக்கு சென்று விட்டனர். ஆனால் சசிகுமார் மட்டும் அலுவலக அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அப்போது அலுவலக கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு அலுவலக அறையில், கயிறால் தூக்கில் தொங்கிய நிலையில் சசிகுமார் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸ் நிலையத்துக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ணைக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சசிகுமாருக்கும், அவருடைய மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இதன் காரணமாக அவர், அலுவலக அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News