செய்திகள்
குடியிருப்புக்குள் உலா வரும் கரடிகள்

குடியிருப்புக்குள் உலா வரும் கரடிகள்- பொதுமக்கள் பீதி

Published On 2021-07-15 10:08 GMT   |   Update On 2021-07-15 10:08 GMT
கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து, அவை குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.
கோத்தகிரி:

கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளதால் அடிக்கடி காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஊருக்குள் 3 கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இதையடுத்து வனத்துறையினர் கரடிகளை பிடிக்க 2 கூண்டுகள் வைத்தனர். தொடர்ந்து இந்த கூண்டுகளில் 2 கரடிகள் சிக்கின. குட்டி கரடி மட்டும் தப்பிச்சென்றுவிட்டது. இதையடுத்து அந்த கரடிகளை வனத்துறையினர் அப்பர் பவானி வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மிளிதேன் கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் 3 கரடிகள் மீண்டும் உலா வந்த வண்ணம் உள்ளன. இதனால் பணிக்கு சென்று வரும் தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வரும் கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும். மேலும் கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து, அவை குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News