மின்னல் தாக்கி பெண் பலி: பெற்றோரை இழந்து 2 மகள்கள் தவிப்பு - கிராம மக்கள் சோகம்
ஆர்.எஸ்.மங்கலம்:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியம், சித்தூர்வாடி ஊராட்சி மேலச்சித்தூர்வாடி கிராமத்தைச் சேர்ந்த பாலு மனைவி மார்க்கரெட்மேரி (வயது45). இவர்வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது இடியுடன் கூடிய மழை பெய்தது.
அப்போது மின்னல் தாக்கியதில் மார்க்கரெட் மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பவுலின்ரோசி (24), பிரின்சியா (22) என்ற மகள்கள் உள்ளனர்.
கணவர் இறந்த நிலையில் மார்க்கரெட்மேரி கூலி வேலை பார்த்து மகள்களை படிக்க வைத்து கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வந்தார்.
மூத்த மகள் பவுலின்ரோசி பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்துள்ளார். இவருக்கு சில தினங்களில் திருமண ஏற்பாடுகள் நடைபெற இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது மகள் பிரின்சியா பி.டெக் படித்து வருகிறார்.
தந்தை இல்லாத நிலையில் தாய் திடீரென மின்னல் தாக்கி உயிரிழந்த நிலையில் செய்வதறியாமல் இரு மகள்களும் தவித்து வருவது இந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
சம்பவ இடத்திற்குச் சென்ற ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் முருகவேல், கிராம நிர்வாக அலுவலர் பூப்பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் ராணிகாளிமுத்து மற்றும் திருப்பாலைக்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.