செய்திகள்

பேராசிரியை விவகாரத்தில் கவர்னர் அவசரம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- சரத்குமார்

Published On 2018-04-18 05:51 GMT   |   Update On 2018-04-18 05:51 GMT
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலால் அவசரம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று சரத்குமார் தெரிவித்தார். #sarathkumar #Nirmaladevi
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் கவுரவத்தலைவர் சீனிவாசன் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்சி தலைவர் சரத்குமார் இன்று புதுக்கோட்டை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பெண் பேராசிரியை மாணவிகளிடம் நடத்திய சர்ச்சைக்குரிய உரையாடல் வழக்கில் கவர்னர் ஏன்? இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்று தெரியவில்லை.

தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அவர் அவசரம் காட்டுவது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசு பேராசிரியை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியுள்ளது. எல்லா வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று கூறுவது தவறான வாதம்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் மட்டுமே காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். ஆனால் கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? என்பது சந்தேகமே. அதன் பிறகும் அமையுமா? என்பதும் கேள்விக்குறியே.

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் காவிரி பிரச்சனையில் ஒருமித்த கருத்தோடு போராடி வருகிறது. வருகிற 25-ந்தேதி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காவிரி பிரச்சனைக்காக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் பாலியல் தொந்தரவுகளும் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்தால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி தேவையில்லை என்று கூறுவது தவறானது. அது போன்ற கல்வி இருந்தால் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News