செய்திகள்
கைதான 3 பேரை படத்தில் காணலாம்.

திருப்பூர் அருகே வடமாநில வாலிபரை கொன்று குளத்தில் வீசிய 3 பேர் கைது

Published On 2021-11-27 09:07 GMT   |   Update On 2021-11-27 09:07 GMT
வாலிபரின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி கூலிபாளையம் நால்ரோடு பகுதியிலுள்ள நஞ்சராயன் குளத்தில் முகம் சிதைந்த நிலையில் வடமாநில வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த வாலிபரின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்? என்று விசாரணை செய்து வந்தனர். இதையடுத்து காங்கேயம் துணைபோலீஸ் சூப்பிரண்டு குமரேசன் உத்தரவின்படி ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா, வேலுச்சாமி, பாஸ்கரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நஞ்சராயன் நகரில் வசித்து வரும் குமார் (வயது 48), அப்துல்லா(35) மற்றும் பிச்சைமுத்து (35)ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த 21-ந்தேதி இரவு வீட்டில் தனியாக ஒரு இளம்பெண் இருந்தபோது வடமாநில வாலிபர்அத்துமீறி நுழைந்ததும் அதன் காரணமாக 3 பேரும் சேர்ந்து அந்த வடமாநில வாலிபரை அடித்து கொலை செய்து குளத்தில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரை கைது செய்த ஊத்துக்குளி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News