ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Published On 2021-11-19 05:43 GMT   |   Update On 2021-11-19 05:43 GMT
பரணி மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமி சன்னதி தெருவில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வந்து மகாருத்ர தீபம் எனும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முந்தைய நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி மகா தீபம் ஏற்றப்படும். அதன்படி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.

சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் அமைந்திருக்கும் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா ஹோமங்கள் செய்து சுவாமி நெல்லையப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பரணி மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமி சன்னதி தெருவில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வந்து மகாருத்ர தீபம் எனும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

பாளையங்கோட்டை அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி கோவிலில் திருக்கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று காலையில் ராஜகோபாலசாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. மாலையில் கோவில் முழுவதும் 5,008 தீபம் ஏற்றப்பட்டது. இரவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதேபோல் பெருமாள் கோவில்களில் நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
Tags:    

Similar News