செய்திகள்
ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: மத்திய-மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2020-10-21 02:02 GMT   |   Update On 2020-10-21 02:02 GMT
கோடிக்கணக்கான குடும்பங்களை காப்பாற்ற ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் பரிசு சீட்டு என்ற மோகினிப்பிசாசின் ஆட்டம் அதிகமாக இருந்தது. லட்சக்கணக்கானோர் ஒவ்வொருநாளும் தாங்கள் உழைத்து ஈட்டிய பணத்தை பரிசு சீட்டுகளில் இழந்தனர். அதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. அப்போது பா.ம.க. தான் தொடர் போராட்டங்களை நடத்தி பரிசு சீட்டுகளை தடைசெய்ய வைத்தது. ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்படவில்லை என்றால், அடுத்த சிலமாதங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும். அதை மத்திய-மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.

பொது இடங்களிலோ, மன்றங்களிலோ பணம் வைத்து சூதாடினால் அது குற்றம் ஆகும். ஆனால், ஆன்லைன் சூதாட்டங்கள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. சென்னை ஐகோர்ட்டு உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும் ஆன்லைன் சூதாட்டம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை; தடை செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருக்கும் போதிலும், மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். மத்திய, மாநில அரசுகளே... ஆன்லைன் சூதாட்டம் என்ற ‘ஆக்டபஸ்’ இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதை தடை செய்யுங்கள்; அதன்மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களை காப்பாற்றுங்கள் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News