வழிபாடு
தல்லாகுளம் பெருமாள்

சித்திரை திருவிழா: தல்லாகுளம் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2022-04-02 07:06 GMT   |   Update On 2022-04-02 07:06 GMT
கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா முகூர்த்தக்கால் தல்லாகுளம் கோவிலில் நடப்பட்டது. 14-ந்தேதி தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றானது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த விழாவின் முன்னேற்பாடாக சப்பர முகூர்த்த விழா கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது. இதை தொடர்ந்து சித்திரை பெருந்திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக நேற்று காலை 10.25 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங் கடாசலபதி பெருமாள் கோவிலின் சன்னதி முன்பாக கொட்டகை முகூர்த்த விழா நடைபெற்றது.

இதில் கோவில் மண்டப வளாகத்தில் யாழி திருமுகத்திற்கு முன்பாக நாணல் புல், மாவிலை, பூ மாலைகள், சந்தனம், தாம்பூலம், தேங்காய், பழங்கள், வைத்து, நூபுர கங்கை தீர்த்தத்தால், அபிஷேகம் பட்டர்களின் வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க நடந்தது.

பின்னர் மங்கள இசையுடன், வர்ணம் பூசப்பட்ட முகூர்த்த கால்கள், மாவிலை, மாலைகளுடன் இணைக்கப்பட்டு கோவில் உள்பிரகாரம், மற்றும் வெளிப்புறம் உள்ள ராஜ கோபுரம் முன்பாகவும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மண்டபங்கள் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது. வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கள்ளழகர் பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படு கிறார்.

தொடர்ந்து 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கள்ளழகர் எதிர் சேவை மதுரை மூன்று மாவடியில் நடைபெறுகிறது. 16-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.50 மணிக்குமேல் 6.20 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். பின்னர் ராமராயர் மண்டபத் திலும், அன்றிரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலிலும் சுவாமி எழுந்தருள்கிறார்.

17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சேஷ வாகனத்தில் காட்சி தருகிறார். அதன் பின்னர் கருட வாகனத்தில் எழுந் தருளி தேனூர் மண்டபத்தில் மாலை 3 மணிக்கு மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், நடைபெறும். அன்றிரவு திவான் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

18-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் மோகனவதாரத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். 19-ந் தேதி (செவ்வாய் கிழமை) இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளல், 20-ந் தேதி (புதன்கிழமை) காலையில் பிரியாவிடை பெற்று கள்ளழகர் பல்லக்கு பரிவாரங்களுடன் அப்பன் திருப்பதி வழியாக கள்ளழகர் கோவிலுக்கு செல்கிறார்.

பின்னர் அன்று பகல் 1.30 மணிக்குள் அழகர் மலைக்கு கள்ளர் திருக்கோலத்தில் வந்து சேருதல். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் கோவில் துணை ஆணையர், அனிதா மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள் உள்துறை அலுவ லர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா, அழகர்கோவிலுக்கு உள்ளேயே அரசு வழிகாட்டுதல்படி நடந்தது. 2 வருடத்திற்கு பிறகு கள்ளழகர் இந்த வருடம் சித்திரை மாத திருவிழாவிற்கு மதுரைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News