செய்திகள்
மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Published On 2021-01-20 06:46 GMT   |   Update On 2021-01-20 06:46 GMT
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 2 நாட்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பொதுமக்களுக்கும், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அகரம் கலைக்குழுவுடன் இணைந்து வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணி முதல் 7.50 மணி வரை விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் (தெரு நிலை) கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான நாடகம் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து வருகிற 25-ந்தேதி காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை வண்ணாரப்பேட்டை மெட்ரோவிலிருந்து விமான நிலையம் மெட்ரோ (ஏஜி.டி.எம்.எஸ். வழியாக) மற்றும் விமான நிலையம் மெட்ரோவிலிருந்து சென்ட்ரல் மெட்ரோ (கோயம்பேடு வழியாக) செல்லும் மெட்ரோ ரெயிலில் பொம்மலாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சென்னை மாநகரில் வசிக்கும் மெட்ரோ ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெறும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News