செய்திகள்
பிரதமர் மோடி பிரசாரம்

கேரளா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவதே பாஜகவின் நோக்கம்- பிரதமர் மோடி

Published On 2021-03-30 08:25 GMT   |   Update On 2021-03-30 08:25 GMT
பாஜக அரசின் விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டத்தால் 11 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கேரளா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவதே பாஜகவின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறினார்.
பாலக்காடு:

கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது . இந்நிலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் புறப்பட்ட பிரதமர் மோடி, கோவை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு சென்றார். பாலக்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இடதுசாரிகள் 2 தங்கத் துண்டுகளுக்காக கேரளத்துக்கு துரோகம் இழைத்துவிட்டனர். யேசுநாதரை காட்டிக்கொடுத்த யூதாஸ் போல இடதுசாரிகள் கேரளத்துக்கு துரோகம் இழைத்துள்ளனர்.

கேரள மக்கள் ஊழல், சாதீயத்துக்கு எதிராக துணிவுடன் போராட முன்வர வேண்டும். பாஜக ஆட்சியில் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரித்துள்ளது.

பாஜக அரசின் விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டத்தால் 11 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கேரளா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவதே பாஜகவின் நோக்கம்.

இடதுசாரிகளும் காங்கிரசும் வேறல்ல; அவர்கள் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவர்கள். இடதுசாரிகளும் காங்கிரசும் இருவேறு பெயர்களில் இருந்தாலும் செயல்பாடு ஒன்றுதான்.

மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஓரணியில் உள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சி காலத்தில் கூட்டணி அமைத்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, பிரச்சனை ரீதியில் இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். ஆனால், கேரளாவில், தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்கின்றனர். கேரளா வேகமாக வளர்ச்சி பெறுவதற்கான நேரம் வந்துள்ளது.

இடது கட்சிகள் இங்கு பலமுறை ஆட்சியில் இருந்து உள்ளனர். ஆனால் அவர்களின் தலைவர்கள் இன்னும் ஜூனியர் லெவல் குண்டர்களைப் போலவே நடந்து கொள்கிறார்கள். அவர்கள் கீழ், அரசியல் போட்டியாளர்கள் கொல்லப்படுகிறார்கள், ஹேக் செய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். கேரளாவில் பாஜக அரசு இந்த வன்முறையைத் தடுக்கும்.

கேரளாவிற்கும் சுற்றுலாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக,  இடது சாரிகள் , காங்கிரஸ் இங்கு சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிகம் எதுவும் செய்யவில்லை. தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு ஒரு அடிப்படையாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News