செய்திகள்
சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

மேலப்பாளையம்-திருநகரி சாலை சீர்செய்யப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-12-26 01:30 GMT   |   Update On 2020-12-26 01:30 GMT
குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் மேலப்பாளையம் - திருநகரி சாலை சீர்செய்யப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொள்ளிடம்:

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் எடமணல் ஊராட்சியில் மேலப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளன. கடந்த ஆண்டு மேலப்பாளையம் கிராமத்தில் மட்டும் மேலப்பாளையம்- திருநகரி சாலை ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்காமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தற்போது மேலப்பாளையம் - திருநகரி சாலையில் பள்ளி வாகனம், லாரிகள் சிரமத்துடன் சென்று வருகின்றன. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், மேலப்பாளையம்-திருநகரி சாலை இதுவரை சீரமைக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே பொதுமக்களின் நலன்கருதி மேலப்பாளையம்- திருநகரி சாலை சீர்செய்யப்படுமா? என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags:    

Similar News