செய்திகள்
அந்தியூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
அந்தியூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். அவருடைய மகன் பிரகாஷ் (வயது 23). இவர் கோவையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி பிரகாஷ் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி சிறுவர்களுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இறங்கி தண்ணீரில் பிரகாசின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றி பிரகாஷ் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.