செய்திகள்
திருப்பூரில் இன்று காலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால்பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இந்தநிலையில் நேற்றிரவு முதல் லேசான தூரலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.
இந்த மழை இன்று காலை வரை தொடர்ந்து பெய்தது. பலத்த மழையாக பெய்யவில்லை. சாரல் மழை போல் பெய்தது. இதனால் பழுதடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறியது.
இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
மழையின் காரணமாக திருப்பூரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விவசாய பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை மளிகை-காய்கறி கடைகளுக்கு சென்ற பொதுமக்கள் குடைப்பிடித்தப்படி சென்றனர்.