செய்திகள்
கோப்புபடம்

சட்டசபை கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பதை தடுக்க முயற்சி - தி.மு.க. குற்றச்சாட்டு

Published On 2020-09-13 01:51 GMT   |   Update On 2020-09-13 01:51 GMT
குட்கா விவகாரத்தில் புதிய நோட்டீசு அனுப்பி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுக்க முயற்சி நடக்கிறது என்று தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை:

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 19.7.2017 அன்று சட்டப்பேரவையில் குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகைப்படங்கள் காட்டப்பட்டது தொடர்பாக உரிமைக்குழு நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த ரிட் மனு மீதான வழக்கில் கடந்த 25.8.2020 அன்று, தலைமை நீதிபதிஏ.பி.சாஹி மற்றும் நீதிபதிசெந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய ஐகோர்ட்டு முதல் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி அன்று கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு, 19.7.2017 (மூன்றாண்டுகளுக்கு முன்னர்) அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழகச் சட்டப்பேரவைச் செயலாளர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு வழங்கியுள்ளார்.

சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த நோட்டீசுகள் வழங்கப்பட்டுள்ளதோடு, 14.9.2020 அன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புது நோட்டீசுகளின் நோக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ.க் களை நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுப்பதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச்சட்டமன்றத்தில் எழுப்புவதைத் தவிர்க்கவுமே என்பது தெளிவாகிறது.

எனவே, தி.மு.க. தலைவர்மு.க.ஸ்டாலின் உள்ளிட்டதி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இந்தப் புதிய நோட்டீசுகளை எதிர்த்து ஐகோர்ட்டில் புதிய ரிட் மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News