செய்திகள்
இலங்கை அணி

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து அணியை 70 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

Published On 2021-10-20 18:00 GMT   |   Update On 2021-10-20 18:30 GMT
அயர்லாந்து அணி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
அபுதாபி:

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 8வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இலங்கை அணி எதிர்கொண்டது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணியில் பதும் நிஷன்கா மற்றும் ஹஸரங்கா ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். நிஷன்கா 61 ரன்களும், ஹஸரங்கா 71 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

அதன்பின், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டிர்லிங் 7 ரன்களிலும், கெவின் ஓ ப்ரைன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பால்பிரின் நிலைத்து நின்று ஆடி 39 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேம்பெர் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்ற வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.  இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 18.3 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த தோல்வியின் மூலம், அயர்லாந்து அணி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

இலங்கை அணி தரப்பில் தீக்‌ஷனா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம், இலங்கை அணி 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், இலங்கை அணி சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
Tags:    

Similar News