செய்திகள்
அரியானா: கால்வாய்க்குள் பாய்ந்த கார் - 4 பேர் பலி
அரியானாவில் திருமண விழாவில் பங்கேற்க ஒரு குடும்பத்தினர் சென்ற கார் கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சண்டிகர்:
அரியானா மாநிலம் சோனிபேட் பகுதியில் உள்ள சாலையில் இன்று அதிகாலை ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தங்கள் உறவினரின் திருமண விழாவில் பங்கேற்க சென்றனர்.
முனக் என்ற பகுதியை கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் அருகே இருந்த கால்வாய்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்துகுறித்து தகவலறிந்த போலீசார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காரையும் தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தனர்.
அதிகாலை நேரத்தில் போதிய வெளிச்சமின்மை மற்றும் சாலையில் தடுப்புகள் இல்லாதது ஆகிய காரணங்களால் இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் எனவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.