செய்திகள்
பனப்பாக்கம் அருகே நடைபயிற்சியின் போது வாகனம் மோதி டிரைவர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே நடைபயிற்சி சென்ற தனியார் நிறுவன டிரைவர் மீது வாகனம் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த பெரியதென்னல் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி மாலை பனப்பாக்கம் சாலையில் கண்டிகை பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் ஏற்பட்ட அவர் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து முருகனின் தந்தை கணபதி கொடுத்த புகாரின்பேரில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.