செய்திகள்
கடலூர் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது
கடலூர் அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தாரகேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று கிழக்கு ராமாபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பெரியகாரைக்காட்டை சேர்ந்த விஜயக்குமார் மகன் செந்தில்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.