செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 25 ஆயிரம் கன அடியாக குறைப்பு

Published On 2021-11-25 04:12 GMT   |   Update On 2021-11-25 04:12 GMT
மேட்டூர் அணை கடந்த 13-ந் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் 14-ந் தேதி முதல் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு காவிரியில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது.

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 25 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 26 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை கடந்த 13-ந் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் 14-ந் தேதி முதல் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இன்று காலையும் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரில் 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து 25 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி மற்றும் கால்வாயில் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது.
Tags:    

Similar News