நாகர்கோவிலில் மோட்டார் வாகன ஆய்வாளர் காரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக ரகசியமாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். நேற்று இரவு டி.எஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
மார்த்தாண்டத்தில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் என்பவரது காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகர்கோவில் ஒழுகின சேரி பகுதியில் தடுத்து நிறுத்தி சோதனை மேற் கொண்டனர்.
அப்போது காரில் கட்டுகட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பெருமாளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பணத்திற்கான ஆவணங்கள் குறித்து கேட்டனர். அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரிய வந்தது.
இதையடுத்து காரில் இருந்த ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் ரொக்கப்பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பெருமாளை விசாரணைக்காக அந்த பகுதியில் உள்ள வனத்துறை அலு வலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நீடித்தது.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் பெருமாளை விடுவித்தனர். இன்று மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். பெருமாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெருமாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாளுக்கு பணம் வந்தது எப்படி என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீ சார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். புரோக்கர்கள் சிலர் இவருக்கு வாகனங்களை பதிவு செய்ய பணம் கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. எனவே புரோக்கர்களை பிடித்து விசாரிக்கவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.