செய்திகள்
தோகைமலை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
தோகைமலை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை:
தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலையில் நாடக்காப்பட்டி பிரிவு ரோட்டிற்கு வடபுறம் தனியார் கல்லூரிக்கு எதிரில் நாமக்கல் மாவட்டம் தம்மாநாயக்கன்பட்டியை சேர்ந்த குமாரசாமி மகன் ராமசாமி (வயது 33) என்பவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஐஸ்வர்யா தோகைமலை போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.