ராயபுரத்தில் அரிவாளுடன் சுற்றிய 3 வாலிபர்கள் கைது
ராயபுரம்:
ராயபுரம், கிரேஷ்கார்டன் பகுதியில் 3 வாலிபர்கள் வீச்சரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உதவி கமிஷனர் தினகரன், இன்ஸ்பெக்டர் காசியப்பன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் அரிவாளுடன் சுற்றியவர்களின் உருவம் பதிவாகி இருந்தது. மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து எண்ணூரை சேர்ந்த மனோ, புதுவண்ணாரப்பேட்டை பாலகிருஷ்ணா நகரை சேர்ந்த விஜயன், சூர்யா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து வீச்சரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் கைதானவர்களுக்கும் வேறு ஒரு வாலிபருக்கும் இடையே மதுக்கடையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த வாலிபரை கொலை செய்ய மனோ உள்பட 3 பேரும் திட்டமிட்டு சுற்று வந்தது விசாரணையில் தெரிந்தது.