செய்திகள்
நிலக்கடலை ஏலத்தில் வங்கி பண பரிவர்த்தனை - தயங்கும் விவசாயிகள்
வங்கி பண பரிவர்த்தனையின் பலன் குறித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அவிநாசி:
அவிநாசி சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை நிலக்கடலை ஏலம் நடத்தப்படுகிறது. வர்த்தகத்துக்கு உரிய பணத்தை, வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வங்கி மூலமே பரிமாற்றம் செய்ய வேண்டும் என விற்பனைக் கூட சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அவரவர் வங்கிக் கணக்கை விற்பனைக் கூட நிர்வாகிகளிடம் வழங்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலமும் நேரிலும் விவசாயிகள் மத்தியில் நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் பலரிடம் வங்கி பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வு இல்லை.
வங்கியில் நகைக்கடன் உள்ளிட்ட சில கடன்களை வாங்கியுள்ளோம். நிலக்கடலை வர்த்தகம் மூலம் அந்த கடன் தொகைக்கு பிடித்தம் செய்து விடுவர் என்ற அச்சம் பலரிடம் உள்ளது. சிறிய அளவில் நிலக்கடலை சாகுபடி செய்வதால் உடனுக்குடன் பணம் தேவைப்படுகிறது.
சேவூர் பகுதியில் 2 ஏ.டி.எம்., மையங்களே உள்ளன. சுற்றுவட்டார கிராமப்புறங்களில் ஏ.டி.எம்., மையங்கள் இல்லாததால் அவசர தேவைக்கு ஏ.டி.எம்., மையங்களுக்கு சென்று பணம் எடுப்பதில் சிரமம் உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறுகையில்:
இந்த நிலக்கடலை சீசனில் இதுவரை 68க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.22 லட்சத்திற்கும் மேல் வங்கி பணிபரிவர்த்தனை மூலம் தொகை வழங்கியுள்ளோம். வங்கி பண பரிவர்த்தனையின் பலன் குறித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.