செய்திகள்
நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை - பாராளுமன்றத்தில் தகவல்
நாடு முழுவதும் உள்ள 756 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் புள்ளிவிவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் 255 மாவட்டங்கள், 1,597 வட்டங்கள் மற்றும் 756 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத், லட்டூர், சோலாப்பூர், புசாவல் ஆகிய பெரிய, நடுத்தர நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. நிலத்தடி நீரை அதிக அளவில் எடுப்பது, நகரங்களில் மக்கள் பெருக்கம், கிடைக்கும் நீரை திறமையின்றி பயன்படுத்துதல் ஆகியவையே நகரங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணங்கள் ஆகும்.
‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் நகர்ப்புறங்களில் 1 கோடியே 7 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.