செய்திகள்
வானிலை நிலவரம்

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் கனமழை தொடரும்

Published On 2019-10-22 04:06 GMT   |   Update On 2019-10-22 04:06 GMT
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறி உள்ளது.

இந்நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாகவும், இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. 

ஏற்கனவே அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக வலுப்பெற்று ஓமனை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Tags:    

Similar News