செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 1500 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
வீடுகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகள் மூலம் விஜர்சனம் செய்யப்பட்டது.
திருப்பூர்;
தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக் கூடாது என்றும், விசர்ஜன ஊர்வலம் நடத்தக் கூடாது என்றும் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே இந்து அமைப்புகள் சார்பில் கோவில்கள், தனியார் இடங்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தடையை மீறி விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்க்சாய் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் 850 காவலர்களும், மாநகரில் காவல் ஆணையர் வே.வனிதா உத்தரவின்பேரில் 2 துணை ஆணையர்கள், 7 உதவி ஆணையர்கள் தலைமையில் 900 காவலர்களும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனினும், திருப்பூர் மாநகரில் கோவில்கள், தனியார் இடங்களில் 750 சிலைகளும், மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 விநாயகர் சிலைகளும் இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
அந்த சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு நேற்றிரவு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகள் மூலம் விஜர்சனம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் விநாயகர்சதுர்த்தி விழா நடைபெற்றது.