செய்திகள்
சென்னை மாநகராட்சி

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் - பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Published On 2021-09-21 23:18 GMT   |   Update On 2021-09-21 23:25 GMT
பொது, தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநகராட்சியின் ஒருசில பகுதிகளில் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளைக் கொட்டுவதாக மாநகராட்சிக்கு புகார் வந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றின் ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த நிறுவனங்கள் அரசின் தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு திறக்கப்படும் நிறுவனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற திடக்கழிவுகள் அருகில் உள்ள பொது இடங்களில் கொட்டப்படுவதாக மாநகராட்சிக்கு புகாராக பெறப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களில் இருந்து குப்பைகளை கொட்டுபவர்கள் மீது ரூ.500-ம், சாக்கடை மற்றும் திரவ கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டும் நபர்கள் மீது ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்கள் மாநகராட்சியின் பொது இடங்களிலும் நீர்வழி தடங்களிலும் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டுவதை தவிர்க்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News