செய்திகள்
ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ்

2 பந்துகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் போட்டியில் வெற்றி

Published On 2021-11-17 17:24 GMT   |   Update On 2021-11-17 17:24 GMT
24 பந்தில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணியால் 2 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே நியூசிலாந்தை வீழ்த்த முடிந்தது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.

தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 42 பந்தில் 70 ரன்களும், 3-வது வீரராக களம் இறங்கிய சாப்மேன் 50 பந்தில் 63 ரன்களும் விளாசினர். இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் 14 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ரோகித் சர்மா உடன் சூர்யாகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 36 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். சூர்யகுமார் 40 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா எளிதில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் கடைசி நான்கு  ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரை டிரென்ட் பவுல்ட் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சூர்யகுமார் யாதவை வீழ்த்தினார்.

இதனால் கடைசி 3 ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் பெர்குசன் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 2 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 19-வது ஓவரை சவுத்தி வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.



இதனால் கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. டேரில் மிட்செல் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் வைடு மூலம் ஒரு ரன் கிடைத்தது. அதற்குப் பதிலாக வீசப்பட்ட பந்தில் வெங்கடேஷ் அய்யர் பவுண்டரி அடித்தார். இதனால் 5 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

அடுத்த பந்தில் வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழந்தார். இதனால் 4 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் அக்சார் பட்டேல் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை ரிஷாப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட, இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Tags:    

Similar News