செய்திகள்
இடி

திருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி

Published On 2019-10-20 17:26 GMT   |   Update On 2019-10-20 17:26 GMT
திருவெறும்பூர் அருகே வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை இடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெறும்பூர்:

புதுக்கோட்டை மாவட்டம் ஊரத்திபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). விவசாய கூலி தொழிலாளி. இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடியில் உள்ள ஒருவரது வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு கன மழை பெய்தது. திடீரென இடி, மின்னல் தாக்கியதில் விவசாயி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் துவாக்குடி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்ககாக துவாக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள ஒட்டக்குடி காவிரி ஆற்று பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது காவிரியாற்றில் சுமார் 50வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அவர்கள் இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனேபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் பிணமாக மிதந்தவரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் பிணமாக மிதந்தவர் யார்? எந்த ஊரைசேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரை யாரும் கொலை செய்து இங்கு வந்து வீசி சென்றார்களா? அல்லது ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News