ஈரோட்டில் பிளஸ்-1 மாணவியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் கைது
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த முளியனூர் கிராமத்தில் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதன்பேரில் அம்மாபேட்டை முளியனூர் கிராமத்தில் இருந்த 16 வயது சிறுமியிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களை பிரியாதேவி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது அந்த சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருவதாகவும், கடந்த மாதம் 17-ந் தேதி அவரது விருப்பம் இல்லாமல் சிறுமியின் தாய் சேலம் மாவட்டம் மோலப்பாளையம் அழைத்துச் சென்று கனகராஜ் (25) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.
கனகராஜ் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பவானி மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் குழந்தைகள் திருமண தடைச் சட்டம், பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த கனகராஜ் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.