செய்திகள்
தமிழக அரசு

மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஊசிகளின் தரம் என்ன? - விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

Published On 2019-11-28 03:01 GMT   |   Update On 2019-11-28 03:01 GMT
தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஊசிகளின் தரம் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுவது இயல்பு. ஆனால் தற்போது நோயாளிகளுக்கு ஊசி போடும்போது அவர்களின் உடலுக்குள் ஊசி ஒடிந்து புகுந்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

இது தமிழக சுகாதார நலத்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. எனவே கடந்த சில நாட்களுக்குள், ஊசி ஒடிந்த 5 சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த சுகாதார நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்படும் ஊசியின் தரம் எப்படிப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ஊசி ஒடியும் சம்பவங்கள் எப்போதாவது நிகழ்வதுண்டு. ஆனாலும் அடிக்கடி இதுபோன்ற சம்பவம் நடப்பதால், அதை விசாரணைக்கு உட்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் நடந்த சம்பவம் தொடர்பாக, நோயாளிக்கு ஊசி போட்ட செவிலியர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்ற இடங்களிலும் விசாரணைக்குப்பிறகு, எப்படி தவறு நடந்தது?, பணியில் அஜாக்கிரதையாக இருந்தது யார்? என்பது போன்ற விவரங்கள் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.



இதுகுறித்து பீலா ராஜேஷ் மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், சிரிஞ்ச் என்று அழைக்கப்படும் ஊசிகளை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்திடம் வாங்குகின்றன. ஊசிகளை வாங்குவதற்கு டெண்டர் விட்டு தனியாரிடம் இருந்து அவற்றை மருத்துவ சேவைக்கழகம் பெறுகிறது.

தற்போது ஊசி ஒடியும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், வாங்கப்படும் ஊசிகளின் தரம் பற்றி விசாரணை நடத்தவும், சோதனை செய்யவும் மருத்துவ சேவைக் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் ஊசிகளின் இருப்பு மற்றும் தரம் பற்றி மருத்துவ சேவைக்கழகம் ஆய்வு செய்யும். ஊசியின் தரத்திலோ அல்லது ஊசியின் வகையிலோ மாற்றம் செய்ய வேண்டும் என்று மருத்துவ சேவைக்கழகம் கேட்டுக்கொண்டால், அதற்கேற்ற நடைமுறைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவங்கள் குறித்து அரசின் சில மூத்த டாக்டர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

நோயாளிகளின் தசையின் தடிமன், உடல் எடை ஆகியவை வேறுபட்டிருக்கும். எனவே அதற்கேற்ற வகையில் ஊசிகளை தேர்வு செய்து செலுத்துவது அவசியம். இதற்காக சிறிது, நடுத்தரம், பெரிது ஆகிய 3 வகைகளில் ஊசிகள் உள்ளன.

ஊசியின் தடிமன் சிறியதாகவும், ஆனால் அதே நேரத்தில் நோயாளியின் தசை அதைவிட கெட்டியானதாக இருந்தால், தசைக்குள் ஊசி ஒடிந்து தங்கிவிட வாய்ப்பு அதிகம். ஊசி போடும் நடவடிக்கை சாதாரணமானதல்ல.

அதற்கு தேவையான வெளிச்சம் இருக்க வேண்டும். ஊசி போடுவதற்கு ஏதுவான மேஜை இருக்க வேண்டும். அது, ஊசி போடும்போது நோயாளியின் உடல் அசைவை கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட இந்த வசதிகள் இல்லை.

மருத்துவ சேவைக்கு தேவையான வசதிகளும், உபகரணங்களும் இருப்பதில்லை என்பதை அரசு டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதான் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பதற்கு காரணமாக உள்ளது.

இதுபோன்ற விவகாரங்களில் மருத்துவ அலுவலர்களின் கவனக்குறைவு என்ற ஒரு குற்றச்சாட்டை மட்டும் கூறுவது தவறு. வேறு பிரச்சினைகளும் இருக்கலாம். மருத்துவ சேவைக்கழகம் வாங்கி வினியோகிக்கும் ஊசிகள், மருந்துகள், உபகரணங்கள் போன்றவை தரம் குறைந்ததாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. ஊசிகளை உபயோகிப்பதற்கு முன்பு ஊசிகளின் தரத்தை மருத்துவ அலுவலர்கள் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News