செய்திகள்
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2020-11-20 08:45 GMT   |   Update On 2020-11-20 08:45 GMT
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.21 ஆயிரத்து 710 பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அப்போது கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திருப்பூர் கோர்ட்டு வீதியிலுள்ள திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் துணை சூப்பிரண்டு தட்சிணா மூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.

அதன்படி முதலில் ஒன்றிய மேலாளர் மற்றும் ஊழியர்கள் இருந்த அறையில் உள்ள ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கணினியில் பதிவேற்றப்பட்ட ஆவணங்களையும் சரி பார்த்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 21 ஆயிரத்து 710 பறிமுதல் செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர் கவுசல்யா தெரிவித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இரவு 10.30 மணிக்கு மேலும் தொடர்ந்து சோதனை நடந்தது.
Tags:    

Similar News