ஆன்மிகம்
ஊஞ்சல் மண்டபத்தில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது

Published On 2021-10-29 04:35 GMT   |   Update On 2021-10-29 04:35 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவத்தின் 5-வது நாளான நேற்று ஊஞ்சல் மண்டபத்தில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும். அதேபோல, இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் 25-ம் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.

ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.

அதன்பின் இரவு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளுளினார். இரவு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், ஊஞ்சல் மண்டபத்திலிருந்து மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ஊஞ்சல் உற்சவத்தின் 5-வது நாளான நேற்று ஊஞ்சல் மண்டபத்தில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் நிறைவு நாளான 9-ம் நாள் (1-ந் தேதி) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சந்திர புஷ்கரணி வந்தடைகிறார். நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். அத்துடன் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News