ரேஷன் கடைகளில் கூட்டம் சேரக்கூடாது - உணவுப்பொருள் வழங்கல்துறை உத்தரவு
கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும் நாட்களில் ரேஷன் கடைகளில் எக்காரணத்தைக் கொண்டும் கூட்டம் சேர அனுமதிக்கக் கூடாது என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் நிவாரண உதவி தவறாமல் கிடைக்கும் வகையில் வீடு, வீடாக சென்று டோக்கன் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த காரணத்தைக் கொண்டும் ரேஷன் கடைகளில் வைத்து டோக்கன் கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார். அதுபோன்று வழங்கினால் மக்கள் அதிகளவில் கூடி விடுவார்கள் என்பதற்காகவே வீடு, வீடாக டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் கூட்டம் கூடாமல் இருக்கும் வகையில் தேவையான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை கடை ஊழியர்கள் செய்து இருக்க வேண்டும்.
இவ்வாறு உணவுப்பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.