செய்திகள்
மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடிக்கு மேல் நீடிப்பதை படத்தில் காணலாம்.

மேட்டூர் அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

Published On 2021-11-24 04:19 GMT   |   Update On 2021-11-24 04:19 GMT
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி உள்ளதால் கடந்த 14-ந்தேதி முதல் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு காவிரியில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை படிப்படியாக குறைந்துள்ளது.

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தொடர்ந்து ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்ட படி வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி உள்ளதால் கடந்த 14-ந் தேதி முதல் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

இன்று 2-வது நாளாக தொடர்ந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் குளிக்கவும், அருகில் செல்லவும் தடை நீடிக்கிறது. மேட்டூர் அணை கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் 11 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் இனி வரும் நாட்களிலும் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News