செய்திகள்
சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை படத்தில் காணலாம்.

சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Published On 2021-09-20 09:30 GMT   |   Update On 2021-09-20 09:30 GMT
தொடர்ந்து அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி அணை நிரம்பியது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. வழக்கமாக ஜூன் மாதம் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் . 

இந்த ஆண்டு நீர் இருப்பு மற்றும் பருவ மழைகள் காரணமாக அணை கட்டப்பட்ட 64 ஆண்டுகளில் முதல் முறையாக மே மாதம் 16-ந்தேதி ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி அணை நிரம்பியது.

இதனால் கடந்த 3 மாதமாக அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டு இரு மாவட்ட பாசன நிலங்கள் பயன்பெற்று வந்தன.

இந்நிலையில் சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. 

அதன்படி இன்று காலை 10 மணிக்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்கள் தூவி அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.

இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட  21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இன்று முதல் 2022 பிப்ரவரி 2-ந்தேதி வரை ஆற்று மதகு வழியாக, 4,536 மில்லியன் கன அடி நீர் உரிய இடைவெளிவிட்டு வழங்கப்படவுள்ளது.

அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 25,250 ஏக்கர் நிலங்களுக்கு 2,661 மில்லியன் கன அடி நீர் 135 நாட்களில் 70 நாட்கள் உரிய இடைவெளி விட்டு பிரதான கால்வாய் வழியாக வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்:

சம்பா சாகுபடிக்காக இன்று முதல் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தண்ணீர் வழங்கப்படுகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் தாராபுரம், கரூர், அரவக் குறிச்சி தாலுகாவில் உள்ள  நிலங்களும், புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் உள்ள  நிலங்கள் என மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்றனர்.
Tags:    

Similar News