செய்திகள்
தமிழகத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-03-31 07:46 GMT   |   Update On 2021-03-31 09:10 GMT
பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாகும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, மற்ற பல நடவடிக்கைகளை எடுப்பது போன்றவற்றை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் தளர்வுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா மீண்டும் அதிகம் பரவி வருகிறது. எந்த சமயத்திலும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையில் தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் இந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்த மாதத்துக்கும் நீடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து இன்று பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் ஆலோசனையின் அடிப்படையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது. நோயை கட்டுக்குள் கொண்டுவர ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம். நோய் கண்டறியும் இடங்களில் உடனடியாக தனிமைப்படுத்துதல், பாதிப்பு பகுதியாக அறிவித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாகும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, மற்ற பல நடவடிக்கைகளை எடுப்பது போன்றவற்றை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் உள்ள விதிகள்படி செயல்பட உத்தரவாதம் அளிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதை மேலும் அதிகப்படுத்த வேண்டும்.

65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட கூடாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மாவட்ட கலெக்டர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News