ஆன்மிகம்
கிரிவலப் பாதைக்கு பிரியும் பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதை காணலாம்.

திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை விதித்ததால் இந்த மாதமும் பக்தர்கள் ஏமாற்றம்

Published On 2020-10-31 07:49 GMT   |   Update On 2020-10-31 07:49 GMT
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா ஊரடங்கு உத்தரவினால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டதால் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான தடையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மற்ற நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் கிரிவலம் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் போக்குவரத்து அனைத்தும் விடப்பட்டு உள்ளதாலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு வருவதாலும் ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். பவுர்ணமி நேற்று மாலை 6.41 மணிக்கு தொடங்கி இன்று (சனிக்கிழமை) இரவு 8.45 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இருப்பினும் பவுர்ணமி நேற்று மாலையில் தொடங்கியதால் நேற்று பகலில் ஏராளமானோர் தனித் தனியாக கிரிவலம் சென்றனர்.

தொடர்ந்து கிரிவலப்பாதையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் காரில் சென்றவாறு ஆய்வு செய்தார். பின்னர் மதியத்திற்கு மேல் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டது.

இதையடுத்து கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் கிரிவலம் செல்ல முடியாமல் வெளியூர் பக்தர்கள் மட்டுமல்லாது உள்ளூர் பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனையொட்டி திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். பவுர்ணமி நேரத்தில் கிரிவலப் பாதையில் நேற்று மக்கள் யாரும் கிரிவலம் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News