நண்பர்களுடன் குளிக்க சென்ற டிரைவர் கல் குழியில் மூழ்கி பலி
கோவை:
கோவை சீரநாயக்கன்பாளையம் பகவதி நகரை சேர்ந்தவர் வித்யாசங்கர் (வயது 27). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது நண்பரின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சூலூர் கண்ணம்பாளையம் சென்றார்.
அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் கண்ணம்பாளையம் அருகே உள்ள கல் குழி பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வித்யா சங்கர் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்றார்.
அப்போது அவர் நீரில் தத்தளித்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வித்யா சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.