ஆன்மிகம்
மூலவர் துர்க்கா பரமேஸ்வரி அம்மனையும், சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த உற்சவரையும் படத்தில் காணலாம்.

அம்மன்குடி பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில்

Published On 2021-03-11 04:13 GMT   |   Update On 2021-03-11 04:13 GMT
அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் அம்மன்குடி கிராமத்தில் பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இத்தலத்தின் மகிமையை ஸ்கந்த புராணம் சேத்திர காண்டம் 66-வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது அவனுடைய ரத்தத்தால் பூசப்பட்ட தன்னுடைய திரிசூலத்தை துர்க்கா பரமேஸ்வரி அம்மன் இங்குள்ள புஷ்கரணியில் சுத்தம் செய்ததால் புஷ்கரணி பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமையில் இந்த தீர்த்தத்தில் நீராடி துர்க்கா தேவியை தரிசனம் செய்பவர்கள், தங்கள் மனதால் ஆசைப்பட்ட எல்லா நலன்களையும் அடைவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. தேவியானவள், மகிஷாசுர வதத்திற்கு பின்னர் அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கத்தை கைலாஷ்ஸ்வரர் என்ற பெயருடன் பிரதிஷ்டை செய்து தபசுக்கு இடையூறு செய்பவர்களை நாசம் செய்வதற்காக ஸ்ரீ விநாயகரையும் பிரதிஷ்டை செய்து தேவியானவள் 12 வருடங்கள் மிக கடுமையான தவம் செய்தாள். அதுமுதல் இந்த இடமானது தேவி தபோவனம் என்ற பெயருடன் பிரசித்தி அடைந்து இருக்கிறது.

இங்கு வருபவர்களுக்கு தேவியின் தரிசனத்தால் பாப விமோசனமும், இஷ்ட சித்திகளும் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தேவியின் தவத்தினால் மகிழ்ந்த கைலாசநாதபெருமாள், தேவியை நோக்கி உன்னுடைய தோஷங்கள் எல்லாம் நீங்கி விட்டன. நீ இத்தலத்திலேயே வீற்றிருந்து உன்னை தரிசிப்பவர்களின் தோஷங்களை நீக்கி அருள்பாலித்து வருவாயாக. உனது அருளால் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என திருவாய் மலர்ந்தருளினார்.

தனக்கு அருள் புரிந்த கைலாச நாதரை பார்வதி அம்மையுடன் தேவியே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். சிவபெருமான் ஆணைப்படி இத்திருக்கோவிலில் குடிகொண்டு அருளினாள் துர்க்கா பரமேஸ்வரி. தேவி, தவம் புரிந்தமையால் தபோவனம் என்றும், இவ்வூரில் குடிகொண்டு அருளியதால் அம்மன்குடி என்றும் புகழ் பெற்று இவ்வூர் விளங்குகிறது. சிவன் கோவிலில் துர்க்கா தேவியின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பாகும். ஆலயத்தின் கர்ப்பகிரகத்திற்கு வெளியில் 3 சுவர்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. பாவம் நீங்கவும், சிவ அபராத தோஷம் நீங்கவுமான பாப விமோசன தீர்த்தம் இவ்வாலயத்திற்கு வடதுபுறம் உள்ளது.

இவ்வாலய விமானங்கள் திருமதிற் சுவர்கள் திருமடைப்பள்ளி நுழைவு வாயில் முதலிய அனைத்தும் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று குடமுழுக்கு விமரிசையாக நடந்தது. மீண்டும் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி குடமுழுக்கு விழா நடந்தது.

முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் வாழ்ந்த ஊர். இங்கு கி.பி. 944-ல் இக்கோவிலை கட்டி ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது. இவ்வூர் சோழமன்னர் காலத்தில் அம்மன்குடி என்று அழைக்கப்பட்டது. இத்திருக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது.

அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.

கோவிலுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள்

சோழ மன்னர்கள் காலத்தில் இந்த ஊர் உய்யக்கொண்டான் வளநாட்டில் காவிரிக்கும், அரசலாற்றிற்கும் இடைப்பட்ட பிரதேசம் வேநாடு என்ற பிரிவின் கீழ் இருந்ததாக குறிக்கப்படுகிறது. வேநாடு என்பது பல புண்ணிய ஷேத்திரங்கள் உள்ள பிரதேசம் என்பது காஞ்சி பரமாச்சாரியாரின் விளக்கம். இந்த கோவிலுக்கு பலரும் மானியங்கள் கொடுத்து உள்ளார்கள். இ்ந்த கோவிலில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் எரிய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தினசரி மூன்று சிவயோகியாருக்கு உணவு அளிக்க மானியம். தினசரி பானை கொடுக்கும் குயவருக்கு மானியம், ஓதுவார், நாட்டியக்காரர், மாலை கட்டுபவர், வாத்தியம் வாசிப்பவர்களுக்கு மானியம், இதுபோன்ற பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பல கல்வெட்டுகள் சிதைந்து போய் விட்டதால் விவரங்கள் கண்டுகொள்ள முடியவில்லை.

அம்மனை வழிபட சிறப்பான நாட்கள்

துர்க்கா தேவியானவள், சகல தேவதைகளும் தேஜஸ்களில் இருந்தும் உண்டானபடியால் துர்க்கைக்கு செய்யும் பூஜை அனைத்து தேவைகளுக்கும் செய்யும் பூஜைக்கு சமம் ஆகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்காதேவி விளங்குவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. ஸ்தல விருட்சம் வில்வம். இத்தலத்தில் வழிபட சிறப்பிற்குரிய நாட்களாக விசேஷமாக 5 பருவங்களை பெரியோர்கள் வகுத்துள்ளனர்.

துர்க்கையை கீழ்க்கண்ட தினங்களில் பூஜித்தால் சிறப்பாகும். கிருஷ்ண பட்ஷமும், செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் சுக்கிலபட்ஷமும், அஷ்டமி திதியும், அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இந்த கோவிலில் ராகுதோஷம், சுக்கிரதோஷம் ஆகியவற்றிற்கு சாந்தி செய்தால் விசேஷ பலன் உண்டு. திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News