செய்திகள்
சாரதா ஊழல் வழக்கு - கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்
சாரதா ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நாளை ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை எனக்கூறி கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க சென்றது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளை போலீசார் கைது செய்தது. அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக ராஜீவ் குமார் முன்ஜாமீன் பெற்றார்.
இதற்கிடையே, சிபிஐ கைது செய்வதற்கான தடையை கொல்கத்தா கோர்ட் இன்று விலக்கிக் கொண்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நாளை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்துள்ளது.